இஸ்ரேலின் ஹைபா நகரில் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேயர் இதுகுறித்து கூறியதாவது: வரலாற்று சங்கத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாள் என் வீட்டு கதவை தட்டி முழுமையான ஆராய்ச்சி செய்த புத்தகம் ஒன்றை வழங்கினார். அதில், இந்த நகரத்தை ஒட்டோமான்களிடமிருந்து விடுவித்தது ஆங்கிலேயர்கள் அல்ல, இந்தியர்கள் தான் என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார்.
ஆனால், அதுவரை இந்த நகரம் பிரிட்டிஷ் வீரர்களால்தான் விடுவிக்கப்பட்டது என்பதாக எங்களுக்கு தொடர்ச்சியாக போதிக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட தீரம் மிகுந்த இந்திய வீரர்களுக்கு இங்கு அஞ்சலி செலுத்துவது பெருமையாக உள்ளது.
இனி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எங்களை விடுவித்தது பிரிட்டிஷ்காரர்கள் அல்ல, இந்தியர்கள்தான் என்பதை மாற்றி அச்சிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதலாம் உலகப்போரின்போது, ஈட்டி, வாள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய இந்திய குதிரைப்படை பிரிவுகள், கார்மல் மலையின் பாறை சரிவுகளில் இருந்து ஒட்டோமான் படைகளை விரட்டி அடித்தது. பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இதை ‘‘வரலாற்றின் கடைசி மிகப்பெரிய குதிரைப்படை நடவடிக்கை’’ என்றே அழைக்கின்றனர். இவ்வாறு யாஹவ் தெரிவித்தார்.