மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார். சண்டை முற்றியதால், அவர் மனைவியை அடித்து, உதைத்தார். இதில் போலீஸில் புகார் தெரிவிக்க போகிறேன் என கூறிவிட்டு இரவில் வீட்டை விட்டு மனைவி புறப்பட்டார்.
அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்த தன்வர், ஒரு தூணில் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்து பூட்டுப் போட்டார். பின்னர் இரும்பு கம்பியை கேஸ் அடுப்பில் காய வைத்து மனைவியின் உடலில் பல இடங்களில் சூடு போட்டார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. ஒரு நாள் முழுவதும் இரும்புச் சங்கிலியால் கட்டியபடி இருந்தார்.
சர்தார் சிங், தனது கிராமத்தினரை பஞ்சாயத்துக்கு அழைத்து, மனைவி போலீ ஸில் புகார் செய்வதை தடுக்க முயற்சித்தார். கணவர் வெளியில் சென்றதும், அருகில் இருந்த கல்லை எடுத்து பூட்டை உடைத்து இரும்புச் சங்கிலியை துண்டித்தார். பின்னர் 6 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு இரவில் நடந்து சென்றார்.
இவர் கழுத்தில் சங்கிலி மற்றும் பூட்டுடன் செல்வதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டவர் என பலர் நினைத்தனர். ஒருவர் மட்டும் இந்தப் பெண் மீது இரக்கப்பட்டு உணவு வாங்கி கொடுத்தார். இரவு 10 மணிக்கு கில்ச்சிபூர் காவல் நிலையத்துக்குள் மங்கிபாய் நுழைந்தார். இவரது நிலையை கண்டு போலீஸார் திடுக்கிட்டனர்.
அவர்களிடம் தனது கணவர் மது போதையில் அடித்து உதைத்து, உடலில் சூடு வைத்ததாக கூறினார். அவரது கழுத்தில் இருந்த இரும்புச் சங்கிலி மற்றும் பூட்டை அகற்றிய போலீஸார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து, சர்தார் சிங் தன்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
