‘ஹபீபி’ விமர்சனம்: தமிழ் இஸ்லாமியர் வாழ்வியலை பேசும் ‘முயற்சி’ எப்படி?

0
19

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது ‘பாய்’ என்ற அடைமொழியுடன் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையாக காட்டப்படும்.

இத்தகைய சூழலில்தான் தமிழ் முஸ்லிம்களின் அசல் வாழ்வியலையும், அவர்களின் அன்றாட இன்ப துன்பங்களையும், கலாச்சாரக் கூறுகளையும் துளியும் சிதையாமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது ‘ஹபீபி’ திரைப்படம்.

தமிழ் சினிமா இதுவரை தொடத் தயங்கிய யதார்த்தமான இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில், மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் யூசுப் (கஸ்தூரி ராஜா). இயந்திரங்களின் வருகையால் தன் கைத்தறித் தொழில் முற்றிலும் அழிவின் விளிம்பிற்குச் சென்ற பிறகும், இளைஞர்கள் பலரும் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குப் புலம்பெயரும் சூழலிலும், தன் மகன் அபுதாஹிர் (ஈஷா) இந்த தொழிலை தொடர்ந்து நடத்துவார் என்று பிடிவாதமாக நம்பும் ஒரு வயதான நெசவாளர். ஆனால், அபுவின் மனதோ அதே சமூகத்தில் சற்றே உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நிலோபரின் (மாளவிகா மனோஜ்) மீது காதல் வயப்பட்டுள்ளது.

ஆண்டுகள் உருண்டோட, அபுவின் குடும்பமும் வேறு வழியின்றித் தங்களின் பாரம்பரியக் கைத்தறி தொழிலை விடுத்து, வெளிநாட்டு சம்பாத்தியத்தை நோக்கி தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறது. இதன்பிறகு அபுவின் காதல் நிறைவேறியதா என்பதே ‘ஹபீபி’ படத்தின் கதை.

தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், அந்த மக்களின் வாழ்வியலை மிக துல்லியமாக பேசி இருக்கிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் காட்டிவந்த பல ‘ஸ்டீரியோடைப்களை’ உடைத்து மிக நேர்மையாக இஸ்லாமிய சமூகத்தை திரையில் கொண்டு வந்துள்ளளார் இயக்குநர் மீரா கதிரவன். தான் வாழ்ந்த மண்ணையும், பார்த்துப் பழகிய மக்களையும் எந்தவித மேற்பூச்சுகளும், பாசாங்கும் இன்றி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

திருநெல்வேலி வட்டார மொழியுடன் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரபு வார்த்தைகளை கலந்து பேசும் தொனி அச்சு அசலாக படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் திருமண சடங்குகள் தொடங்கி ஜனாஸா தொழுகை, சுன்னத், தொழுகைக்கு ‘உளூ’ செய்வது, பாங்கு சொல்வது வரை அனைத்தும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படையில் இது ஒரு காதல் கதையாக இருந்தாலும் குடும்பத்தினர் இடையிலான பாசப்பிணைப்பு, 90-களுக்கு முந்தைய இஸ்லாமிய குடும்பங்களில் ஓர் அங்கமாக இருந்த வெளிநாட்டு வாழ்க்கை போன்ற விஷயங்களும் ரசிக்கும்படி இணைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, அபுதாஹிரின் சித்தப்பாவும் சித்தியும் பிரிவின் வலியை ஆடியோ கேசட்டுகள் மூலம் பகிர்ந்து ஆற்றிக் கொள்ளும் காட்சி, படத்தின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. 

கதையின் நாயகனான கஸ்தூரி ராஜா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் பாரம்பரிய தொழிலை விடாத வயதான நெசவாளராக ஒரு பக்கம் பிடிவாதமும், இன்னொரு பக்கம் தன் மகனுக்காக கலங்கும் தந்தையாகவும் நெகிழ வைக்கிறார்.

படத்தில் மாளவிகா மனோஜுக்கு க்ளைமாக்ஸ் தவிர எங்கும் ஒரு வசனம் கூட இல்லை. நடிக்கவும் பெரிதாக வாய்ப்பில்லை. அபுதாஹிராக நடித்திருக்கும் ஈஷா தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். பர்தா அணிந்தபடி பெரியாரியம், மார்க்சியம் பேசும் பெண்ணாக வரும் தனஸ்ரீ சுதாகரன் ஈர்க்கிறார்.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை, திரைக்கதை தொய்வடையும் இடங்களிலெல்லாம் அதை தன் இசையால் தாங்கிப் பிடித்து உணர்வுபூர்வமான கனத்தை கூட்டுகிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அந்தக் காலக்கட்டத்தின் மனிதர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் மிகவும் எதார்த்தமாக கண்முன்னே நிறுத்துகிறது. 

திரைக்கதையில் பெரிய அளவிலான தடைகளோ, ஏற்ற இறக்கங்களோ இல்லாதது படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. என்னதான் இயல்பான வசனங்கள், இஸ்லாமியர்களின் வாழ்வியலை அசலாக காட்சிப்படுத்தியது போன்ற பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. காரணம், படம் பல இடங்களில் மெகா சீரியல் மோடுக்கு போய் விடுகிறது.

ஒரு குடும்பத்தின் 40 ஆண்டு கால பயணத்தை இரண்டரை மணி நேரத்தில் சொல்லும்போது, அது பார்க்கும் நம்மை நெகிழச் செய்ய வேண்டும், உலுக்க வேண்டும், அந்த குடும்பத்தில் ஒருவராக உணர வைக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவொரு மேஜிக்கும் இதில் நிகழாதது சோகம். 

காதல், நலிந்து வரும் நெசவுத் தொழில், தந்தையின் போராட்டம், வெளிநாட்டு வாழ்க்கையால் பிரிந்து வாழும் தம்பதிகள் என பல விஷயங்களை படம் பேசினாலும் அவை அனைத்தும் மிக மேம்போக்காகவே இருக்கிறது.

இஸ்லாமியக் குடும்பப் பின்னணிக்குள் நடக்கும் காதல் கதைகள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு என்ற நிலையில், தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், அதே வழக்கமான திரைக்கதை க்ளிஷேக்களுக்குள் ‘ஹபீபி’ சிக்கித் தவிக்கிறது. 

இந்தப் படம் சக்திவாய்ந்த அரசியல், சமூகக் கூறுகளை திரைக்கதையில் அதற்கான வாய்ப்பு இருந்தும் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். எனினும், தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத ஒரு களத்தை துணிச்சலுடன் கையில் எடுத்து அதை இயன்ற வரை நேர்மையாக பேச முயன்றிருக்கும் ‘ஹபீபி’யை தாராளமாக வரவேற்கலாம். 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here