நில முறைகேடு வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அமலாக்க துறை: சித்தராமையா குற்றச்சாட்டு

0
40

நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

நில முறைகேடு வழக்கில் சித்தராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தி வருகிறார்.

முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்த இடத்தை கையகப்படுத்தியதற்காக‌ மைசூரு மாந‌கர மேம்பாட்டு கழகம் மாற்று நிலம் ஒதுக்கீடு செய்தது. இதில் முறைக்கேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால் லோக் ஆயுக்தா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மூத்த மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, இளைய மைத்துனர் தேவராஜ் ஆகியோரிடம் லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே அமலாக்கத்துறையும் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை. நான் எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் நான் நிரபராதியாக வெளியே வருவேன். ஆனால் அரசியல் ரீதியாக பழிவாங்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, என் மீதான வழக்கின் விசாரணைக்கு தடைக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

அந்த மனு விசாரணைக்கு வரும் நாளைக்கு முந்தைய தினம் அமலாக்கத்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் மூலம் அமலாக்கத்துறை, மறைமுகமாக கர்நாடக உயர் நீதிமன்றம் மூலமாக அழுத்தம் கொடுக்க முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. இந்த சதிகளை எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வழக்கில் இருந்து விடுதலை ஆவேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here