ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008-ல் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலையில் வழக்குப் பதிவு செய்தனர். நிலம் வாங்கியதில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
ரூ.7.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டதாக ஆவணங்களில் உள்ளது. ஆனால், நிலத்தை வாங்கியதற்காக கொடுக்கப்பட்ட காசோலை பணமாக்கப்படவில்லை என அமலாக்கத்துறை புகார் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேரும் வரும் மே 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.














