சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வரும் செப். 1-ம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் ‘குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்’ என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தென்சென்னை மண்டலங்களான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதியில் மொத்தம் 50 ஆயிரம் வீடுகளை சென்றடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் 10 ஆயிரம் வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடையாறு 179-வது வார்டுக்கு உட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீடுகளின் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கிடையே பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அடையாறு மண்டல அலுவலர் காளிதாஸ், செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.















