பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யானார். இதனால் முதல்வராக பாஜக மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 11 பேர், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியை சேர்ந்த 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஹார் தலைநகர் பாட்னாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து பிஹார் பாஜக தலைவர் சஞ்சய் சரோகி கூறும்போது, ”மே 7ம் தேதி நடைபெறும் அமைச்சரவை விரிவாக்க விழாவில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நிதின் நவீன், அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்” என்றார்.
