இந்திய விமானப் படையின் அதிநவீன ‘பைட்டர் காம்பாட் லீடர்’ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் முதல் பெண் ‘டாப் கன்’ போர் விமானி என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் படைத்துள்ளார்.
சுமார் 20 வாரங்கள் நடைபெற்ற அதிதீவிர வான்வழித் தாக்குதல் மற்றும் உத்திகளுக்கான உயர் பயிற்சியை நிறைவு செய்ததன் மூலம், நாட்டின் தலைசிறந்த போர் விமானிகளின் வரிசையில் அவர் இணைந்துள்ளார். இந்திய விமானப் படையின் மிக உயரிய மற்றும் கடுமையான பயிற்சி மையங்களில் ஒன்றான குவாலியரில் உள்ள ‘டேக்டிக்ஸ் அண்ட் ஏர் காம்பாட் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட்’ மையத்தில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
33 வயதாகும் பாவனா காந்த், பிஹார் மாநிலம் தார்பங்காவில் பிறந்தவர். சிறுவயது முதலே விமானியாக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்த இவர், இந்திய வான்வழி வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்குப் போர் விமானி கதவுகள் திறக்கப்பட்டபோது, அவனி சதுர்வேதி மற்றும் மோகனா சிங் ஆகியோருடன் இணைந்து நாட்டின் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றார்.
பெண் போர் விமானியாகப் பொறுப்பேற்றது முதல், தற்போது மிகவும் கடினமான ‘டாப் கன்’ படிப்பை நிறைவு செய்தது வரையிலான பாவனா காந்தின் 8 ஆண்டுகால உழைப்பு, இந்தியப் பாதுகாப்புப் படைகளில் தடம் பதிக்கும் ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்குப் மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
