பாரதிராஜா: தமிழ் மண்ணின் அசல் கலைஞன் | அஞ்சலி

0
25

தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவின் வருகை ஒரு பெருவெடிப்பினை ஒத்தது. திரை இசையில் இளையராஜா அறிமுகமான (1976) அடுத்த ஆண்டு (1977) பாரதிராஜா இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்த இவர்களின் வருகை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.

உயிர்த்தெழுந்த தமிழ் சினிமா

அதுவரையிலும் சினிமா என்பது பெரும்பாலும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டுத் தமிழகம் எங்கும் விநியோகிக்கப்பட்ட பொழுதுபோக்குப் பண்டம். அதில் பலவித கதைகள் மக்களுக்குக் காணக் கிடைத்தன. சாமிப் படங்கள், சண்டைப் படங்கள், பேய்ப் படங்கள், துப்பறியும் படங்கள், கௌபாய் படங்களை எல்லாம் தமிழ் மக்கள் கண்டனர்.

அந்தப் படங்களில் என்ன வேலை செய்தாலும், வறுமையில் வாடினாலும் கதாநாயகர்கள் உயர் ரக ஆடைகளை அணிந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களும் இந்திப் படங்களும் ஏற்படுத்திய பாதிப்பில் உருவான கதைகளையும் உள்ளீடற்ற பாத்திரங்களையும்தான் அதிகமாகத் தமிழ்ச் சமூகம் கண்டு களித்தது (சொற்பமான விதிவிலக்குகளும் உண்டுதான்).

தங்களுக்கு வழங்கப்படும் பொழுதுபோக்கில் தங்களது வாழ்க்கை காட்டப்படுவதில்லை என்பதைக்கூட உணராமல், திரைப்படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணத்தில் மூழ்கியிருந்த தமிழ்ச் சமூகத்தின் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி உசுப்பி எழுப்பிவிட்டவர் பாரதிராஜா. அந்தக் குடம் ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் மயிலுவின் இடுப்பில் இருந்த குடம்.

‘சோளம் வெதைக்கையிலே, சொல்லிப்புட்டுப் போன புள்ள… சோளம் வெளைஞ்சு காத்துக்கெடக்கு, சோடிக்கிளி இங்கேயிருக்கு, சொன்ன சொல்லு என்னாச்சு’ என்கிற பாடலுடன் ‘16 வயதினிலே’ தொடங்கியது.

வாக்குக் கொடுத்துவிட்டுப் போனவன் திரும்பி வராத ஏக்கத்தை எளிய வரிகளில் சொல்லிய இந்தப் பாடல்தான், சப்பாணிக்காகக் காத்திருக்கும் மயிலின் மொழி. எளிய தமிழ் மக்களின் உணர்வில் கலந்த பேச்சு மொழியை அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் பேசின.

அவர்கள் பேசியது எங்கள் ஊர்ப் பேச்சு. எங்கள் பழமொழி. எங்கள் சொலவடை. அவர்களின் முகத்தில் ஒப்பனை இல்லை. முதல் முதலாக ஒரு தமிழ் கிராமத்தின் அசலான பாத்திரங்களாக சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா ஆகியோர் கண் முன்னே நடமாடியதில் தமிழ் சினிமா எழுந்துகொண்டது.

திரை உலகப் புரட்சி

திரை உலகம் என்பது நமக்கு எட்டாத ஒன்று என்று இருந்த பல இளைஞர்களை சென்னையை நோக்கிப் படை எடுத்து வர வைத்தது பாரதிராஜாவின் வெற்றி.

நம்மிலிருந்து ஒரு மனிதர் சென்று ஜெயித்திருக்கிறார் என்கிற உணர்வு ஒரு சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் சாதாரணமானது அல்ல. அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி, தன்னம்பிக்கையை விதைத்தது பாரதிராஜா நிகழ்த்திய சாதனைகளில் தன்னிகரில்லாத ஒன்று.

கிராமங்களிலிருந்து வந்தவர்களில் வென்றவர், தோற்றவர் எல்லாம் உண்டுதான். ஆனால், ஒரு பெரும் கனவை ஜனத்திரளில் விதைத்து, சினிமாவின் ரசனையை உயர்த்தியதிலும், புதுமையை நோக்கித் தமிழ் சினிமாவைத் திருப்பிவிட்டதிலும் பாரதிராஜாவின் பங்கு மிகப்பெரியது.

அந்த வருகைதான் எண்பதுகளில் தமிழ்த் திரையுலகில் புது ரத்தம் பாய்ச்சியது. ‘எண்பதுகள்’ பலவிதங்களில் தமிழ் சினிமாவின் பொற்காலமாகத் திகழ்ந்த ஆண்டுகள். அதற்கான சூழல் உருவானதன் மூலக் காரணம் பாரதிராஜா.

(அந்தச் சூழலைக் கொண்டாட்டமாக மாற்றியவர் இளையராஜா!) ‘16 வயதினிலே’ அடைந்த வெற்றிக்குப் பின்னர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் துணிச்சல் பாரதிராஜாவுக்கு இருந்தது.

‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் கதாநாயகன் சுதாகர், கதாநாயகி ராதிகா. மிகச் சாதாரணமான முகங்கள். குறிப்பாக, அந்தப் படத்தில் ராதிகாவின் தோற்றம் அன்றைய சினிமா ஹீரோயின் அளவுகோலுக்குச் சற்றும் பொருந்தாத ஒன்று.

ஆனால் கிராமத்தின் கிணற்றடியிலும் குழாயடி யிலும் அப்படியான பெண்களைப் பார்க்க முடியும். அது மட்டுமல்ல, அந்தக் கதாநாயகன் பாத்திரம் – ஒரு சிகையலங்காரக் கலைஞன்.

அவனுக்கும் அவனது சாதியைவிடச் சாதிய அடுக்கில் கொஞ்சம் மேலே உள்ள இன்னொரு சாதியைச் சேர்ந்த கதாநாயகிக்கும் ஏற்படும் காதல், அது அந்த ஊரில் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை ‘கிழக்கே போகும் ரயில்’ பேசியது.

கிராமத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பி அந்தக் காதலர்கள் நகரத்துக்கு வாழச் செல்கிறார்கள் என்று அந்தப் படத்தில் சொன்னார் பாரதிராஜா. ஐந்தாவது படமான ‘புதிய வார்ப்புக’ளிலும் பழமை வாதத்தையும் ஆணாதிக்கத்தையும் உடைக்கும் புரட்சிகரமான கதைதான்.

வெவ்வேறு கதைக் களங்கள்

தான் இயக்கிய முதல் இரண்டு படங்களுமே பெரும் வெற்றி கண்ட சாதனையை நிகழ்த்தியவர் பாரதிராஜா. ‘இவருக்குக் கிராமத்துப் படங்கள்தான் எடுக்க வரும்’ என்கிற விமர்சனம் கிளம்பியது. அந்த விமர்சனம் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும்விதமாக அவர் எடுத்ததுதான், ‘சிகப்பு ரோஜாக்கள்’.

கமல், தேவி ஆகியோர் நடித்த அந்தத் திரைப்படம் பாரதிராஜாவால் எந்தக் கதைக் களத்தையும் சிறப்பாக எடுக்க முடியும் என்று காட்டியது. அந்தக் காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட ஓர் ஆங்கிலப் படம் போன்ற ஸ்டைலிஷான த்ரில்லர் ஆக ‘சிகப்பு ரோஜாக்கள்’ இருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல வெற்றிகளை ஈட்டினார் பாரதிராஜா.

ஒளிப்பதிவாளர் நிவாஸ் இயக்கத்தில் பாரதிராஜா திரைக்கதை எழுதி முக்கியப் பாத்திரத்தில் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’, பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்குப் பெரும் வெற்றி யைத் தராவிட்டாலும் அந்தப் படங்கள் அவரது திரை மொழிக்கும் அழகியலுக்கும் சான்றாக அமைந்தவை.

நடுநடுவே தோல்விகள் நேர்ந்தாலும்கூட, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ ஆகிய படங்களை உருவாக்கி, ஜெயித்து, தான் யார் என்று காட்டிக்கொண்டே இருந்தார்.

அசலான கலைஞர்

திரைமொழியில் தனக்கென்று ஓர் அழகியலை உருவாக்கி அனைவரையும் அதை ரசிக்கவைத்தவர் பாரதிராஜா. மிக நெருக்கத்தில் கண்களின் க்ளோஸ் அப், மரத்தின் பின்னிருந்து அழகிய முகத்தைக் காட்டி மறையும் பெண்கள், கரங்களால் முகத்தை மூடி, விரல்களை மெல்ல விலக்கி, வெட்கப் பார்வை பார்க்கும் கவித்துவமான நாயகிகள் என்று அவரது ரசனை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும்.

பசுமை நிறைந்த வயல்களும் நதிகளும் மட்டுமல்லாமல், தேனியின் கரட்டுப்பகுதியில் உள்ள கள்ளிச் செடிகளையும் ஓணான்களையும்கூட அதே அழகுடன் காட்சிப்படுத்தி ஆவணமாக்கியவர்.

அவர் தனது கதையை மட்டுமே படமாக்கவில்லை. ஆர்.செல்வராஜ், பாக்யராஜ், மணிவண்ணன், ரத்னகுமார், கண்ணன், சீமான் ஆகிய திறமையாளர்களின் கதைகளைப் பெற்று அவற்றில் தன் முத்திரையைப் பதித்துத் திரைப்படமாக்கினார்.

அழகியல் மட்டுமல்லாமல் தனது சமூக உணர்வையும் திரைப்படங்களில் வெளிப்படுத்தினார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வேதம் புதிது’ ஆகிய படங்களில் சாதி, மத முரண்களைப் பேசியவர். ‘மண் வாசனை’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’ முதலிய திரைப்படங்களில் தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை மிகுந்த உயிரோட்டத்துடன் சித்தரித்தார். தமிழ் சினிமாவில், மண்ணிலிருந்து கிளைத்து வந்த – நம் நிலம் சார்ந்த மிகவும் அசலான முதல் இயக்குநர் பாரதிராஜாதான்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here