குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் தமிழக மருத்துவ கவுன்சில் அனுப்பிய நோட்டீஸுக்கு பெண் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான் – ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிரசவ சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த மருத்துவரின் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.
இதுதொடர்பான விடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இர்பான் பதிவிட்டது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு, மருத்துவமனை மற்றும் இர்பானுக்கு தனித்தனியே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம், ஏற்கும்படி இல்லாததால், தனியார் மருத்துவமனை அக்.24 முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடைவிதித்தும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, யூடியூபர் இர்பான், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் கொடுத்தார்.
சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மீது தமிழக மருத்துவ கவுன்சிலில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் புகார் கொடுத்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு பெண் மருத்துவருக்கு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் பெண் மருத்துவர், தனது விளக்கத்தை மருத்துவ கவுன்சிலில் அளித்துள்ளார். அதேநேரம், இர்பான் மற்றும் மருத்துவர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இருந்ததா என்பது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மருத்துவ கவுன்சில் எதுவும் தெரிவிக்கவில்லை.