தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.55 லட்சம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

0
529

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.31.95 லட்சத்துக்கான காசோலைகள், ஒரு சைக்கிள் பந்தைய வீரருக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான அதிநவீன பந்தைய சைக்கிள் என மொத்தம் ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனாவில் டிசம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள 4-வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் (சிறுவர் மற்றும் சிறுமியர்) கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 24 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தாய்லாந்து நாட்டில் டிச.1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக திறன் விளையாட்டு இளைஞர் போட்டியில் கலந்துகொள்ள உள்ள 5 நரம்பியல் சார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணம் என மொத்த செலவுத்தொகை ரூ.7,95,000-த்துக்கான காசோலைகளை வழங்கினார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த சைக்கிளிங் விளையாட்டு வீரர் சூர்யபிரகாஷ், தேசிய – சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவருக்கு அறக்கட்டளை நிதியிலிருந்து பந்தய சைக்கிள் வழங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, சைக்கிளிங் விளையாட்டு வீரருக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிளை துணை முதல்வர் வழங்கினார்.

ஆக மொத்தம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 30 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டிகளுக்காக, ரூ.40 லட்சத்து 55 ஆயிரத்துக்கான உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here