டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் வில்சன் குறித்த கருத்து நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

0
223

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில், டிஎன்பிஎஸ்சி தரப்பில் காணொலியில் ஆஜரான மூத்தவழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சனின் செயல்பாடுகுறித்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அதிருப்தி தெரிவித்து, விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பானவீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மூத்த வழக்கறிஞரிடம் நீதிபதி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு வழக்கு உத்தரவில் மூத்த வழக்கறிஞர் குறித்துநீதிபதி தெரிவித்துள்ள கருத்துகளை நீக்கக்கோரியும், மேல்முறையீட்டு விசாரணையை இதே அமர்வுவிசாரிக்கக் கோரியும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், “மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ரிட் மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதியை விலகுமாறு டிஎன்பிஎஸ்சி தரப்பில் கோரப்படவில்லை. இதனால், மேல்முறையீட்டு மனுக்களை இதே அமர்வு விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்ற காணொலி விசாரணை வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “மேல்முறையீட்டு வழக்கில் இருந்து தனி நீதிபதி விலகவேண்டும் என்று வில்சன் கோரவில்லை. அவர் நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்” என்றார்.

பின்னர் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “உயர் நீதிமன்றத்தின் காணொலி விசாரணைக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக, உயர் நீதிமன்றசைபர் கமிட்டி, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது. காணொலி விசாரணைக் காட்சியை, சமூக ஊடகங்களில் யார் பதிவு செய்தது என்பதுஓரிரு நாளில் கண்டுபிடிக்கப்படும்.

சமூக வலைதளங்களில் இருந்து, நீதிமன்ற விசாரணை வீடியோ பதிவை உடனடியாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளையும் நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு மனுக்களை வேறு அமர்வு விசாரணைக்கு அனுப்புமாறு தலைமைநீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here