ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.11) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைவர் ஜவஹர், பொதுச்செயலாளர் ஜெ.ரோஷன் கார்க்கி, தலைவர் விவேக்ராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதை தடுப்பது முக்கியக் கோரிக்கையாகும்.
2026-ம்ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டு முடிவில், ஐடிபிஐ வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்து 494 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.10,837 கோடியாகவும், நிகரலாபம் ரூ.9,514 கோடியாகவும் உள்ளது.
கடன் பாதுகாப்பு வகிதம் 100 சதவீதமாக உள்ளது. 2003-ம்ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில், ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கு குறையாது எனக் கூறப்பட்டது.
ஆனால், தற்போது, அரசும், எல்ஐசியும் சேர்ந்து தங்களது 60.72 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்க முயல்வது நாடாளுமன்ற உறுதிமொழியை மீறும் செயலாகும். சந்தையில் இருந்தோ அல்லது எல்ஐசியில் இருந்தோ 6 சதவீத பங்குகளை அரசு மீண்டும் பெற்று, ஐடிபிஐ வங்கியை முழுமையாக பொதுத்துறை நிறுவனமாக தொடர செய்ய வேண்டும்.
அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்ஐ (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்க வேண்டும். வாரத்தில் 5 நாட்களுக்கு வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தமும், செப். 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள்வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.















