அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைந்திருக்கும் பஹ்ரைன் நோக்கி ஈரான் வன்வழித் தாக்குதலை நடத்தியது. ஆனால், பஹ்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இத்தாக்குதலை முறியடித்ததாகக் கூறியுள்ளதுடன், பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ராணுவம், ஈரானிய ராணுவ இலக்குகள் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இருதரப்புக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்து ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்து சர்வதேசப் பொருளாதாரத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
பஹ்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்பாக, ஈரான் ராணுவம் ஜோர்டானை நோக்கி ஏவுகணைகள், குவைத்தை நோக்கி ட்ரோன்களை ஏவியதாகவும், அவை இடைமறிக்கப்பட்டதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகமும் திங்களன்று தனது கடல் பகுதிக்கு மேல் வந்த ஈரானிய ட்ரோனைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறியுள்ளது.
ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா மிகக்கடுமையான அளவில் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுடன் புதிய ஒப்பந்தம் செய்வதில் தனக்கு ஆர்வமில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு மற்றும் ஈரானின் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















