தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த 14 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தன. மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை கண்டுபிடித்து, பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட 12,577 பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் அறிவுசார் குறைபாடுடைய 5 பேர் மீட்கப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய 53 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















