“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் கடும் தாக்குதல்” – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0
16

ஈரானுடன் மறைமுகமாக நடைபெற்று வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டின் மீது மீண்டும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ட்ரம்ப் பேசுகையில், “நாங்கள் ஈரானுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை இந்தப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், மீண்டும் கடுமையான ராணுவ நடவடிக்கைக்குத் திரும்புவோம். ராஜதந்திர முயற்சிகளுக்கு அதிக நேரம் வழங்கப்படாது. இது மிக விரைவாக நடக்க வேண்டும் அல்லது எதுவுமே நடக்காது” எனத் தெரிவித்துள்ளார். 

மத்தியஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதன் மூலம் எண்ணெய் விலைக் குறைவு மற்றும் பங்குச்சந்தை முன்னேற்றம் போன்ற உடனடி பொருளாதார பலன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓமன், கத்தார், பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் பேசுகையில், போரையோ அல்லது அமைதியையோ எப்போது தீர்மானிக்க வேண்டும் என்பதை அமெரிக்காவுக்கு ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், நாட்டின் நலன்களைப் பாதுகாக்கத் தூதரக வழிமுறை பயன்படும் பட்சத்தில் மட்டுமே அதை ஈரான் பயன்படுத்தும் என்று பதிலளித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here