“திமுகவின் தேர்தல் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்” என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத் துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது. இன்று விஜய் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக்கும், அன்றைய நாளில் ஸ்டாலின் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன.
ஆனால், அன்றைய ஸ்டாலின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே, உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், “திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்” என்று சொல்வேன். அவர் ‘நலத்திட்ட நாயகர்’ என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா, வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று! எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன். எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன். பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்.
“வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்” என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நான் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
“பின் ஏன் இதை எழுதுகிறாய்?” என்று நீங்கள் கேட்பீர்கள். ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்களுக்கான விடயம் புரியும்.
“அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?” என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன. ஆனால் அது முதல்வர் அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எவையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல், நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
பின்குறிப்பு: தேர்தல் அரசியல் செய்பவர்களுக்கு இது பொருந்தும், தேர்தல் பாதையில் செல்லாத மக்கள் இயக்கங்களுக்கு இது பொருந்தாது” என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.















