அமெரிக்காவின் தடையை மீறி சீன எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றது. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது.
ஈரானை ஒட்டி அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் இரு முனைகளிலும் சரக்கு, எண்ணெய் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க கடற்படை முடக்கி உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் தடையை மீறி சீனாவின் ரிச்ஸ்டாரி என்ற எரிவாயு கப்பல் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது. இதில் 2.5 லட்சம் பேரல் மெத்தனால் நிரப்பப்பட்டு இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சீன கப்பல் ஈரானில் இருந்து தொடர்ச்சியாக எரிவாயுவை நிரப்பிச் சென்றது. இதன்காரணமாக அண்மையில் ரிச் ஸ்டாரி கப்பலுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. ஆனால் அமெரிக்காவின் தடையை மீறி அந்த கப்பல் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
ரிச் ஸ்டாரி நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தபோது, கப்பலின் கேப்டன் அமெரிக்க கடற்படைக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசால் தடை விதிக்கப்பட்ட கப்பல் என்றபோதிலும் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்படவில்லை. அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை சீன கப்பல் கடந்து சென்றிருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கானா நாட்டில் செயல்படும் ஈரான் தூதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சீன கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள், சீன கப்பலுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஆனால் சீன கப்பலின் கேப்டன் எதையும் கண்டுகொள்ளாமல் ஹார்முஸ் ஜலசந்தியை நிதானமாக கடந்து சென்றுள்ளார்.
அமெரிக்காவுக்கு அஞ்சும் நாடுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அஞ்சாத நாடுகளுக்கு தடை பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவுக்கு அஞ்சாத நாடுகளின் பட்டியல் மிகவும் நீளமாக இருக்கிறது. இவ்வாறு ஈரான் தூதரகம் கிண்டலடித்துள்ளது.














