கடந்த சீசன் மிகுந்த ஏமாற்றமும், வலியும் தந்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
39 வயதான அஸ்வின், கடந்த 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தார். கடந்த சீசனில் 31 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அவரது பவுலிங் எகானமி 9.13 என இருந்தது. ஒட்டுமொத்தமாக 221 ஐபிஎல் ஆட்டங்களில் 187 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி உள்ளார்.
இந்தச் சூழலில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அவரது ஐபிஎல் கிரிக்கெட் பயணம் சிஎஸ்கே அணியில் தொடங்கி, அங்கேயே முடிவடைந்தது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனது யூடியூப் சேனலில் அவர் பகிர்ந்துள்ளார்.
“சிஎஸ்கே உடனான கடந்த சீசன் எனக்கு மிகுந்த ஏமாற்றம் தந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்னால் இன்னும் சில காலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு கடந்த வலி கொடுத்தது. அதனால் ஓய்வை அறிவித்து விட்டேன்” என்று அஸ்வின் அதில் கூறியுள்ளார்.
கடந்த சீசனில் சிஎஸ்கே 10-ம் இடத்தில் தொடரை நிறைவு செய்தது. இந்த சீசனிலும் முதல் மூன்று இடங்களில் தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் அதே இடத்தில் நீடிக்கிறது.














