‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு தாமதமின்றி பணிச் சான்று வழங்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்.10-ம் தேதி கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க, பணிச் சான்றை பதிவேற்றம் செய்வது அவசியம். எனவே, அவர்களுக்கான பணிச் சான்றை
ஏப்.10-ம் தேதிக்கு முன்பு வழங்க அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும். எனவே, இதில் தனி கவனம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல் ஆசிரியர்களுக்கு பணிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














