ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘கருப்பு’. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரன்ஸ், ஷிவதா, சுவாசிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மே 14ல் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை விஜய்-க்கு சொன்னதுதான் என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், “’கருப்பு’ கதைக்கு பெரிய நட்சத்திரம் தேவை என்று உணர்ந்தேன். விஜய் சாராக இருந்தால் அற்புதமாக இருக்கும் என்று நினைத்தேன். அவரிடம் கதையை விவரித்தேன். இதை உடனடியாகச் செய்ய முடியுமா ? என்று கேட்டார்.
14 மாதங்கள் ஆகும் என்று சொன்னேன். அதனால் அந்த வாய்ப்பு கைகூடவில்லை. அந்தக் கதையை சூர்யா சாரிடம் சொன்னதும் ஒப்புக்கொண்டார். அவருக்குப் பொருந்தும் வகையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.














