துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து நிறுத்தம்

0
18

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

துபாயில் அமைந்துள்ள உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்க துபாய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) அருகே நடந்த ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் தொட்டிகளில் ஒன்று பாதிக்கப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவர துபாய் பாதுகாப்பு படைகள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இச்சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் துபாய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையத்திற்கு அருகில் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நகரத்தின் சில பகுதிகளில் வான் பாதுகாப்பு எச்சரிக்கைகள் ஒலித்தன. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று முக்கிய துறைமுகங்களை காலி செய்ய ஈரான் நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் முக்கிய முனையமான கார்க் தீவில் சமீபத்தில் தாக்குதல்களை நடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகங்கள், கப்பல் தளங்கள் மற்றும் மறைவிடங்களைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here