சென்னை துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் 2027-ம் ஆண்டில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் கூறியதாவது: தொடக்கத்தில் ஒற்றை அடுக்காக திட்டமிடப்பட்ட இப்பாலம், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, 2 அடுக்காக மாற்றப்பட்டுள்ளது.
உள்ளூர் நகரப் போக்குவரத்துக்காக முதல் அடுக்கு, சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 2-வது அடுக்கு அமைக்கப்படுகிறது.
நகரின் முக்கிய பகுதிகளில் வாகனங்கள் பாலத்தில் ஏறவும், இறங்கவும் வசதியாக 13 சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. நேப்பியர் பாலம் பகுதியில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்கப்படுகிறது.
போக்குவரத்து போலீஸார் அனுமதியுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தினமும் 11 மணி நேரம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதை 16 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். 2027 டிசம்பருக்குள் திட்டம் நிறைவடையும்.
நெடுஞ்சாலை பணிகள்
சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை (262 கி.மீ.) திட்டத்தில் கர்நாடகப் பகுதி பணிகள் முடிந்துவிட்டன. தமிழகத்தில் உள்ள 106 கி.மீ. தொலைவில் 3 தொகுப்புகளின் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
தற்போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 77 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய சுங்கச் சாவடிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.4,300 கோடி வசூலானது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையத்தின் சென்னை திட்ட இயக்குநர் சிவம் சர்மா கூறும்போது, ‘‘பிரம்மாண்டமான வார்ப்புத் தளங்களில் பாலத்தின் கான்கிரீட் பாகங்கள் முன்கூட்டியே முழுவீச்சில் தயாரிக்கப்படுகின்றன. இதனால், மழைக்காலத்திலும் இடையூறின்றி மேம்பால கட்டுமானப் பணி நடைபெறும்’’ என்றார்.














