இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 12 பேர் பலி: பதிலடியாக பஹ்ரைனில் ஈரான் தாக்குதல்!

0
16

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலையில் இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள்களில் ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் குட்ஸ் படையின் லெபனான் பிரிவு தளபதிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியதில் குவைத்தில் இரண்டு எல்லை காவல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை (மார்ச் 7), தெஹ்ரான் நகரத்திலும் அதற்கு அருகிலும் உள்ள எண்ணெய் கிடங்குகளில் அமெரிக்க-இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்கியது. எண்ணெய் கிடங்கு தாக்குதல்களுக்குப் பிறகு தெஹ்ரானில் எரிபொருள் விநியோகம் ‘தற்காலிகமாக’ நிறுத்தப்பட்டுள்ளது என்று தெஹ்ரானின் ஆளுநர் முகமது சதேக் மோட்டமெடியன் கூறினார்.

அதேபோல, ஈரானின் மத்திய யாஸ்த் மாகாணத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல்களில் பாதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

“நேற்று இரவு, ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸில் உள்ள நான்கு எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஒரு பெட்ரோலியப் பொருட்கள் போக்குவரத்து மையம் எதிரி விமானங்களால் தாக்கப்பட்டன” என்று ஈரான் எண்ணெய் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெராமத் வெய்ஸ்கராமி தெரிவித்தார். ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை சேதமடைந்ததாக பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிலடி கொடுப்போம்: “நம் எதிரிகள் எந்தவொரு நாட்டையும் பயன்படுத்தி நமது நிலத்தைத் தாக்க அல்லது ஆக்கிரமிக்க முயன்றால், அந்தத் தாக்குதலுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பதிலளிப்பது என்பது அந்த நாட்டோடு நமக்கு தகராறுகள் இருப்பதாகவோ அல்லது அதன் மக்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்புவதாகவோ அர்த்தமல்ல – தேவையின் காரணமாக நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here