உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்ய கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடு தடுப்பு (உபா) சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோரை விடுதலை செய்ய கோரியும், வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், குழுவின் தலைவர் நூர்முகமது, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் என கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்றனர்.














