சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பெண் தொழில் முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைகழக மகளிர் மேம்பாட்டு மையம், சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் பெண் தொழில்முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளது.
பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஐகியூஏசி கட்டிடத்தின் முன்புறம் உள்ள சாலையிலும், விவேகானந்தா கலையரங்கத்தை ஒட்டியுள்ள சாலையிலும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.
இதில் பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் தயாரிப்புகள் பல்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்தப்படும்.
இந்த கண்காட்சி, விற்பனை நிகழ்ச்சியை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.குமரேசன், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.டி.என். ஸ்ரீதர் ஆகியோர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர். இந்த கண்காட்சி வருகிற 6-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.














