போராட்ட நாட்களை பணி நாட்களாக ஈடுசெய்ய பிப்.26 முதல் தினமும் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணியாற்றுவதால் பிப்ரவரி மாதத்துக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கவுரவ விரிவுரையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி யுஜிசி தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. சிவகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம், மாதம் ரூ.57,700 வீதம் 12 மாத கால ஊதியம், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து கடந்த பிப்.9 முதல் கல்லூரி அளவிலும் அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 17 நாட்கள் போராட்டம் நடந்தது. அப்போது, 12 மாத ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்ததால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பிப்.26 முதல் பணிக்குத் திரும்பினர். தொடர் போராட்டத்தின் விளைவாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலையில் போராட்டக் காலத்துக்கான ஊதியம் 17 நாட்களுக்கு ரூ.15,179 பிடித்தம் செய்யப்பட்டால் கவுரவ விரிவுரையாளர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுவர்.
எனவே, போராட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு பிப்.26 முதல் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணியாற்றி வருவதால் பிப்ரவரி மாதத்துக்கான முழு ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க ஆணையிடுமாறு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.














