செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி, அண்ணாமலை, விஜய் ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது, எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: கனிம வளக் கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளர்களை திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே, பழனியாண்டியையும், அவரது ஆதரவாளர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தவெக தலைவர் விஜய்: ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தூக்கி எறியப் போவது உறுதி.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஊடகவியலாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்தும் வீடியோ மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பழனியாண்டி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.



