இந்தியாவுக்கான வரியை 18% ஆக குறைத்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பும் பின்னணியும்

0
16

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதில்தான் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி (Reciprocal Tariffs) மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா. இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பதிவு: “பிரதமர் நரேந்திர மோடி உடன் மேற்கொண்ட உரையாடலை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது அருமை நண்பர்களில் அவர் ஒருவர். வலிமையான மற்றும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர். வர்த்தகம், ரஷ்யா – உக்ரைன் போர் என பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த நகர்வு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்.

பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் நான் கொண்டுள்ள மதிப்பு காரணமாக அவரது கோரிக்கையை ஏற்று வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடித்துள்ளோம். அந்த வகையில் பரஸ்பர வரி விதிப்பு 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும்” என ட்ரம்ப் தெரிவித்தார். பிரதமர் மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு இந்த பதிவு அவர் வெளியிட்டார். இதற்கு பிரதமர் மோடியும் இந்திய மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரிவிதிப்பு: அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.

இந்தியாவுக்கு 50% வரி: இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில் துறைகடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இதில் பரஸ்பர வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here