நீலகிரி மாவட்டம் கீழ்கோத்த கிரியை சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையத்தில் பாக்குத் தோப்பில் வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்குப் பிறகு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி, படிப்பை நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். மேலும், வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யாவிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, ஆட்சியர் அறிவுரையின் பேரில், நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார்.
ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியில் வாசுகி சேர்ந்து, படிப்பைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, வாசுகி நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறும்போது, “எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடு கட்டிக் கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்” என்றார்.



