ஓய்வூதியத் திட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு ‘டேப்ஸ்’ எனப்படும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், ஓய்வுபெறும் சூழலில் பங்களிப்பு அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் என அரசாணையில் கூறப்பட்டது.
இருப்பினும் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே வேண்டும் என்று, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து ஆக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பை உருவாக்கியதுடன், இன்று பிப்.3 முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அறிவித்தது.
இந்நிலையில் மேலும் சில அமைப்புகள் பிப்.10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அனைத்து துறை செயலர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் பணிக்கு வராவிட்டால், வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை. போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, மருத்துவ விடுப்பு தவிர்த்து தற்செயல் விடுப்பு அல்லது வேறு விடுப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று கூறப்பட்டுள்ளது.



