‘துருவ நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு பின்பே புதிய படம் இயக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. பல்வேறு சமயத்தில் வெளியீடு என அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது எப்போது வெளியீடு என்பது தெரியாமல் உள்ளது. இதன் பைனான்ஸ் சிக்கலை சரி செய்ய தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு குறித்து கவுதம் மேனன், “’துருவ நட்சத்திரம்’ படத்தினை முதலில் சூர்யாவை வைத்து தான் தொடங்கினேன். பின்பு விக்ரமை வைத்து இயக்கி முடித்தேன். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக ‘துருவ நட்சத்திரம்’ இருக்கிறது. பைனான்ஸ் சிக்கலால் இப்படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கலை சரி செய்ய எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆனது. இறுதிகட்டப் பிரச்சினைகளை சரி செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வாரங்களில் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துவிடுவோம் என நம்புகிறேன். நானும் வேறு படம் இயக்க சென்றிருக்கலாம். ஆனால், இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். இதனாலேயே புதிய படங்கள் எதையுமே இயக்காமல் இருக்கிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆதரவுமே எனக்கு உந்துதலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.



