கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், போனில் அழைத்தும் வரவழைத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரும், காவல் துறை தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம்ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் ஜி.மணிவண்ணன் ஆகியோரும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், சிபிஐ விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







