ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் சம்பவத்துக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வந்த நிலையில், தவெகவின் பொதுக்குழு தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மீண்டும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்காக, கட்சியில் பல்வேறு மாற்றங்களை விஜய் செய்து வருகிறார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ள தவெக கட்சிக்கு சின்னம் ஒதுக்கக்கோரி, அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்தனர். தவெக கொடுத்துள்ள பொதுவான 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் சின்னம் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ ஓட்டுவார். பைரவா படத்தில் விஜய் கிரிக்கெட் விளையாடுவார். பிகில் படத்தில் விஜய் கபடி பயிற்சியாளராக விசிலுடன் இருப்பார். அதேபோல் பிகில் படத்தில் ‘கப் முக்கியம்’ என்று விஜய் சொல்வார். அதனால், வெற்றிக்கோப்பை சின்னமும் கேட்டுள்ளோம். இந்த நான்கு சின்னமும் விஜய்க்கு மிகவும் பிடித்த சின்னமாக உள்ளது. இதில், ஏதாவது ஒரு சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கினால், சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்” என்றனர்.
மக்கள் நீதி மய்யம்: இதற்கிடையே, பொது சின்னம் ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, விண்ணப்பத்தை அளித்தனர்.














