சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்த மாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளநிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
அதன்பிறகு அந்த நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்பாக ஆட்சேபமில்லா சான்று வழங்கப்படாததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகக் கூறி அந்த நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை தனது வசம் கையகப்படுத்தியது.
காங்கிரஸ் அறக்கட்டளையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தனியார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் நிறுவனம் தரப்பில், “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த நிலத்தை காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்களது கட்டுப்பாட்டில் சுவாதீனம் எடுத்துக்கொண்டதால், இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. ஆகவே வழக்கை திரும்பப் பெற அனுமதியளிக்க வேண்டும்” என்று கேட்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, காங்கிரஸ் அறக்கட்டளைக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.