பளுகல் அருகே குட்டைக்கோடு பகுதி சேர்ந்தவர் சாந்தி (60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜேனட் தங்கம். குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தலா 5.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கடந்த 1965 ஆம் ஆண்டு அதே பகுதி சேர்ந்த கமலன் நாடார் என்பவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாந்தி, ஜெனட் தங்கம் வசிக்கும் நிலப்பகுதி கமல நாடாருக்கு சொந்தமானது என தீர்ப்பு கூறப்பட்டது. இதை அடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சாந்தி, ஜெனட் தங்கம் வசிக்கும் வீட்டை இடிப்பதற்காக நீதிமன்ற அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் அந்த பகுதிக்கு வந்தனர்.
ஆனால் அதற்கு அவர்கள் உறவினர்களும் பொதுமக்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வீட்டை இடிக்க விடாமல் அங்கே உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குழித்துறை கோர்ட் உத்தரவில் குறிப்பிட்டுள்ள இடம் மூன்றுமுக்கு பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவு எல்லை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எல்லை தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.