தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் பொன்.குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் செயலால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதி எண்ணிக்கை குறைவதற்கான ஆபத்து உள்ளது. எனவே, தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே, விகிதாச்சார முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, அடையாள அட்டை வழங்கப்படும் திட்டம் வரவேற்கத்தக்கது. கட்டுமானத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு 7 இடங்களில் தங்கும்விடுதியுடன் கூடிய தொழிற்கல்வி பயிலகங்கள் (ஐடிஐ) தொடங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம், கட்டுமானத் தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி, விடுதிக் கட்டணமின்றி கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.