கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30) தனது குழந்தை உடன் காவடிக்கட்டு நிகழ்ச்சி பார்க்க வில்லுக்குறி அருகே தனது தாயார் வீட்டிற்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சென்றார். நேற்று முன்தினம் ஊருக்கு தாயார், தங்கையுடன் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கருங்கல் பஸ் நிலையத்தில் வைத்து திடீரென ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயின் மாயமாகி இருந்தது. இந்த நிலையில் பஸ்ஸில் இருந்த இரண்டு இளம் பெண்கள் கூட்டத்தின் இடையில் ஓடிவிட்டனர்.
இது குறித்து சரண்யாவின் கணவர் ஐயப்பன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்களின் உருவப்படத்தை ஒப்பிட்டு விசாரணை நடத்தினர். இதில் நகையை திருடியது மேலப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி ஜோதி (35) என்ற பெண்ணை செயின் திருட்டியது சம்பந்தமாக போலீஸ் இன்று 9-ம் தேதி கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.