கடலோர பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0
169

தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 71.6-73.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தெற்கு வங்கக் கடலின் வடக்கு பகுதியில் வரும் 9-ம் தேதியும், தென்மேற்கு வங்கக் கடலின் வடக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10-ம் தேதியும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here