அயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழா: ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட திட்டம்

0
148

அயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழாவை ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிறகு கோயிலில் திரளான பக்தர்கள் மூலவர் பாலராமரை தரிசித்து வருகின்றனர்.

இந்து நாட்காட்டியின்படி சுக்ல பட்ச துவாதசி திதியில் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் சுக்ல பட்ச துவாதசி திதி 11-ம் தேதி வருகிறது. இதையொட்டி கோயிலின் முதலாம் ஆண்டு விழாவை ஜனவரி 11 முதல் 3 நாட்களுக்கு கொண்டாட, கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இந்த 3 நாள் விழா ‘பிரதிஷ்டா துவாதசி’ என அழைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “கோயிலின் பிராண பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்கப்படாத அல்லது பங்கேற்க முடியாத சாதுக்களை இந்த மூன்று நாள் விழாவுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். பெயர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பொறுப்பை தர்மாச்சார்யா சம்பர்க் பிரமுக் அஷோக் திவாரியிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.

முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு ராமர் கோயில் வளாகத்தில் 5 இடங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் யாகசாலை பூஜைகளும் இடம்பெறும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here