தெலங்கானாவில் காரில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள், கதவை திறக்க முடியாத காரணத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாமரகட்டா பகுதியில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பல ஊர்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள் கார்களில் வந்திருந்தனர். இவர்களின் கார்கள் திருமண மண்டபத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தன்மய் ஸ்ரீ (5), அபினய் ஸ்ரீ (4) எனும் சகோதரிகள் ஒரு காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த காரின் கதவுகள் தானாக ‘லாக்’ ஆகிவிட்டது. இதனை அறியாத சிறுமிகள் விளையாடி முடித்த பிறகு கார் கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் இருவரும் மூச்சுத்திணறி காரிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
இதற்கிடையில் அச்சிறுமிகளை அவர்களின் பெற்றோர் பல இடங்களில் வெகு நேரம் தேடியுள்ளனர். கடைசியாக இருவரும் காரில் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து, அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே மூச்சுத்திணறி இறந்து விட்டதாக அறிவித்தனர்.