இருக்கும் போதே விருப்ப மனுவா? – செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொடி பிடிக்கும் காங். மாவட்டத் தலைவர்கள்

0
28

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை பிப்ரவரியில் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், மாவட்ட தலைவர்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பெற விருப்பம் உள்ளவர்கள், இணைய வழியில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று செல்வப்​பெருந்தகை அண்மையில் அறிவித்​தார். இதற்குத்தான் மாவட்ட தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்​துள்ளது.

ஈவிகேஎஸ் மற்றும் மன்மோகன் சிங் படத்திறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. முதல்வர் கலந்து கொண்ட இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டத் தலைவர்​களுடனான இணைய வழி கூட்டத்தைக் கூட்டி இருந்தார் செல்வப்​பெருந்தகை. ஆனால், அவர் மீதான அதிருப்​தியின் காரணமாக இந்தக் கூட்டத்தை சென்னை மாவட்ட தலைவர்கள் ஒட்டுமொத்​த​மாகப் புறக்​கணித்து எதிர்ப்பைக் காட்டினர்.

இதையடுத்து, கிராம கமிட்டியை வலுப்​படுத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகி​களுக்கான பயிலரங்கம், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்​பாளர் அஜோய்​குமார் தலைமையில் சத்தி​யமூர்த்தி பவனில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. அப்போது மாவட்ட தலைவர்கள் 25 பேர் கையெழுத்​திட்ட கடிதத்தை, 17 மாவட்ட தலைவர்கள் அஜோய்​குமாரை நேரில் சந்தித்து வழங்கினர். அதில், ‘செல்​வப்​பெருந்தகை, மாவட்ட தலைவர்களை கலந்தாலோ​சிக்​காமல் தன்னிச்​சையாக முடிவுகளை எடுக்​கிறார். மாவட்ட தலைவர், மாநில நிர்வாகி​களுக்கான விருப்ப மனு பெறுவதை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்​பிட்​டிருந்​தனர்.

இது தொடர்பாக அதிருப்தி மாவட்ட தலைவர்கள் சிலர் நம்மிடம் பேசுகை​யில், “தேர்​தலில் வென்று பதவிக்கு வந்துள்ள மாவட்ட தலைவர்​களுக்​கும், மாநில நிர்வாகி​களுக்கும் பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எங்களது பதவிகளுக்கு நாங்கள் பதவியில் இருக்​கும்​போதே, விருப்ப மனு பெறப்​படு​கிறது. கட்சிக்காக சொந்தக் காசை செலவழித்து போராட்​டங்களை நடத்தி வரும் எங்களிடம் கருத்துக் கேட்காமல் விருப்ப மனு பெறுவதை ஏற்க முடியாது.

அகில இந்திய தலைமையை கலந்தாலோ​சிக்​காமல் செல்வப்​பெருந்தகை இதைச் செயல்​படுத்து​கிறார். அதனால் விருப்ப மனு பெறுவதை நிறுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று, அகில இந்திய காங்கிரஸால் ஒப்புதல் பெறப்பட்ட பதவிகளின் காலம் முடிந்த பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டும். இதைத்தான் அஜோய்​கு​மாரிடம் வலியுறுத்​தினோம்” என்றனர்.

இது தொடர்பாக பேசிய மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்​சந்​திரன், “கட்சி பதவிக்காக கட்டணம் வசூலிப்பது வேறெந்த மாநிலத்​திலும் இல்லாத நடைமுறையாக இருக்​கிறது. மாவட்​டத்தில் உள்ள தலா 4 கமிட்டி உறுப்​பினர்கள் பரிந்​துரையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமிக்​கப்​படுவர். மாநில பதவிகளும் பரிந்துரை அடிப்​படையில் தான் நடக்கும். ஆனால், இப்போது புகுத்தும் நடைமுறையால் காசு இருக்கும் யாருக்கு வேண்டு​மா​னாலும் பதவி கிடைக்​கும்.

இது கட்சிக்காக உழைப்​பவர்களை சோர்வடையச் செய்து கட்சிக்குள் குழப்​பத்தை உண்டாக்​கும்” என்றார். இது தொடர்பாக செல்வப்​பெருந்​தகை​யிடம் கேட்ட​போது, “கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். நியமனத்தில் வெளிப்​படைத் தன்மை வேண்டும் என்பது காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் முடிவு. உதய்பூரில் நிறைவேற்​றப்பட்ட தீர்மானம் இது. அதைத் தான் செயல்​படுத்து​கிறேன். ஒரு காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைமையின் உத்தரவை செயல்​படுத்த வேண்டும். அந்த உத்தரவை மதிக்​காதவர்கள் காங்கிரஸில் இருக்கவே தகுதி​யற்​றவர்கள்.

கட்சியில் மாற்றம் கொண்டு வந்தால் தான் தகுதியான நிர்வாகிகளை வெளிக்​கொண்டுவர முடியும். தற்போது பெறப்​படும் விருப்ப மனு மூலம், கட்சிக்காக உழைப்​பவர்​களுக்கு எந்தப் பாதிப்பு இல்லை. கட்சிக்காக உழைக்​காமல் நீண்ட காலமாக ஒரே பதவியில் இருப்​பவர்கள், அதே பதவியில் தொடர அனுமதிக்க முடியாது” என்றார். கலகம் செய்வதும், கோஷ்டி சேர்த்து கொடி பிடிப்​பதும் நடந்தால் தான் அது காங்கிரஸ். இப்போது செல்வப்​பெருந்​தகைக்கு எதிராக கொடி பிடித்​திருக்​கிறார்கள். எப்படி ச​மாளிக்​கிறார் என்று ​பார்​க்​கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here