அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்? – அண்ணாமலை கேள்வி

0
399

அமைச்சர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: திருவள்ளூரில் திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இருமொழி கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது திமுக. தாய்மொழி கல்வியை கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தை தங்கள் சுயலாபத்துக்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்தி வருகிறது. தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே திமுக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர்? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here