சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ‘விசில்’ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தவெக சின்னம் என்பதால் விசிலுக்கு காவல்துறை தடைவிதித்துள்ளதா என்பன போன்ற கேள்வி எழுந்துள்ளன.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போதுநடந்து வருகிறது இதன் ஒருபகுதியாக நேற்று சென்னைசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சுமார் 21 ஆயிரம் ரசிகர்கள் போட்டியைக் காண திரண்டிருந்தனர். இதற்காக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், பவர் பேங்குகள், குடைகள் மற்றும் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக் கூடிய பொருட்களை மைதானத்துக்குள் எடுத்துச் செல்கிறார்களா என கண்காணித்தனர். அப்போது, ரசிகர்கள் சிலர் வைத்திருந்த விசில்களை போலீஸார் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்குள் விசிலுக்கு தடை என்ற செய்தி சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதையடுத்து, ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பினரும் ‘விசில்’ தடைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே ‘விசில்களுக்கு தடை விதிக்கப்பட்டது காவல்துறையின் முடிவு, அதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் விசில் தடைக்கு ஐசிசி-க்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மைதான நிர்வாகமும் தெரிவித்துள்ளன. மேலும் போட்டி நடைபெறும் நாளில் மைதானத்தைச் சுற்றியுள்ள கடைகளில் விசில் விற்பனை செய்ய வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘கிரிக்கெட் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்லவோ, விசில் விற்பனை செய்யவோ காவல்துறை எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. ஒரு சிலர் இதுபோல சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதில் உண்மை இல்லை’ என விளக்கம் அளித்தனர்.
இருப்பினும் தேர்தல் நெருங்குவதால் அரசியல் காரணங்களுக்காக இந்த தடையை போலீஸார் ஏற்படுத்தினரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தவெக ஊடகப்பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறும்போது, “தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு, அதன் சத்தத்தைக் கேட்டாலே ஆளும் அரசு பயப்படுகிறது” என்றார்.



