Home விளையாட்டு செய்திகள் ‘சண்டையில்தான் தோற்றுள்ளோம்.. போரில் அல்ல..’ – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாய்ச்சல்

‘சண்டையில்தான் தோற்றுள்ளோம்.. போரில் அல்ல..’ – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாய்ச்சல்

0

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாயினிஸ் 26, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 18, பிரப்சிம்ரன் 18 ரன்கள் சேர்த்தனர்.

ஆர்சிபி அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், யாஷ் தயாள் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். 102 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 27 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். விராட் கோலி 12, மயங்க் அகர்வால் 19, கேப்டன் ரஜத் பட்டிதார் 15 ரன்கள் சேர்த்தனர்.

தகுதி சுற்று 1-ல் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி வரும் நாளை (ஜூன் 1) அகமதாபாத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மும்பை அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “இது மறக்க வேண்டிய நாள் அல்ல. நாங்கள் குழப்பமடைந்து நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இதில் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். திட்டமிடல் அடிப்படையில் எனது முடிவுகளை சந்தேகிக்கவில்லை. மைதானத்திற்கு வெளியே, அது சரியாக இருந்தது. ஆனால் களத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை, எங்கள் பந்து வீச்சாளர்களைக் குறை கூற முடியாது. ஏனெனில் இது மிகவும் குறைந்த ஸ்கோர்.

இந்த ஆடுகளத்தில் எங்கள் பேட்டிங்கில் அதிகம் உழைக்க வேண்டும். இந்த மைதானத்தில் நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும், மாறி மாறி பவுன்ஸ் இருந்துள்ளது. நாங்கள் தொழில்முறை வீரர்கள் என்பதால் இதுபோன்ற காரணங்களைச் சொல்ல முடியாது, அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். நாங்கள் சண்டையில் தோற்றுவிட்டோம், ஆனால் போரை அல்ல” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version