விஜய்யின் ‘கில்லி’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் அவர்களோ பெரும் சோகத்தில் இருக்கிறார்கள். இதனை முன்வைத்து பல்வேறு படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘கில்லி’ மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது.
தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி பிப்ரவரி 20-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘கில்லி’. ஒரு ரீ-ரிலீஸ் ஆன படம், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும். அதே தேதியில் அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாகும் என்று விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் அறிவித்துள்ளார். இதனால் அன்றைய தினத்தில் விஜய் – அஜித் படங்கள் மோதல் உறுதியாகி இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கை பிரச்சினையில் சிக்கி இப்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














