கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், ஸ்ரீகுன்றம் நகரத்தை சேர்ந்தவர் சனீத்(26).
இவர் கேரளா முதல் நேபாளம் வரை ஓர் ஆண்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக ஒற்றை சக்கர சைக்கிள் மூலம் சென்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து ஒற்றை சக்கர சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். கோவை, மதுரை, தஞ்சை, புதுச்சேரி வழியாக 800 கி.மீ.பயணித்து நேற்று மாமல்லபுரம் வந்தார்.
அவரை அர்ஜுனன் தபசு சிற்பம் அருகில் மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுற்றுலாப் பயணிகள், தன்னார்வலர்கள், அரிமா சங்கத்தினர் வரவேற்றனர்.
பின்னர் சனீத் மாமல்லபுரத்தில் ஒற்றை சக்கர சைக்கிள் ஓட்டி போதைப் பொருள் ஒழிப்பு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நேபாளத்துக்கு செல்லும் தனது ஓர் ஆண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
