கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதை கொலை வழக்காகப் பதிவுசெய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.
தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று பொய் குற்றச்சாட்டை வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்த கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இக்கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கர்நாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்தியப் புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கர்நாடகாவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் கண்டிப்புடன் பேசி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைத்திட வழி வகுக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கர்நாடக அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதிதலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை மூலம் உண்மை வெளிக்கொணரப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.















