கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.
அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப் படம் தரவில்லை, இயக்குநர் தன் கல்லூரி கால வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார் என நினைத்தேன். மிக கவனமாக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சனைகளை பேசும் கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகள் என்று ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிரச்சினை பற்றிய கதைகளே இல்லாமல் போய்விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன்.
பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. படத்தில் வைக்கப்பட்ட ஃப்ரேம்கள் எல்லாம் மணிரத்னம் மாதிரியும் கதை பாலச்சந்தர் மாதிரியும் இருந்தது. கரீஷ்மா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வருவார்” என்று பிரபாகரன் பேசினார்.