தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்துக்கு மாறாக கடந்த ஜனவரி 26-ம் தேதி வரை மொத்தம் 104 நாட்கள் நீடித்தது. மேலும், பல இடங்களில் அதிகனமழை பெய்தது.
அதேபோல, இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடையைப் போன்று கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 11 மணிக்கு மேல் பொதுமக்கள் வெயிலுக்குப் பயந்து வெளியில் செல்வதை குறைத்து வருகின்றனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதகளில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.